கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் அதிகாரக் கட்டமைப்பை தனது இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஏற்றார்போல் மாற்றியமைத்து வருகிறது. அதிக லாபமீட்டக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நலன்களுக்காக தாரைவார்ப்பது ஒருபக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் மத்திய அரசின் அதிகாரமுள்ள தலைமை பொறுப்புக்களில் இந்துத்துவ காவி சித்தாந்தவாதிகளான ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பார்ப்பனிய இந்துத்துவ சித்தாந்தத்தினை நோக்கமாகக் கொண்டவர்கள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை மறுப்பவர்கள். இந்து, இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வேத பண்பாடு என வைதீக மரபை மட்டுமே ஒருதலைப்பட்சமாக திணிக்கும் போக்குடையவர்கள்.
இந்திய பண்பாட்டுத் துறையின் தலைமைப் பொறுப்புகளை காவிமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சில நாட்களுக்கு முன் Indian Institute of Mass Communication நிறுவனத்திற்கும், பிரச்சார் பாரதி-ன் தேர்வாளர் கழகத்திற்கும் (Prasar Bharati’s new Recruitment Board) தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலாச்சார பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும், இந்திராகாந்தி தேசிய கலை மையம், லலித் அகாதமி, மத்திய பண்பாட்டுவள பயிற்சி மையம் (Indira Gandhi National Centre for the Arts, Lalit Kala Akademi and the Centre for Cultural Resources and Training) போன்றவற்றின் அனைத்து தலைமை பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரச்சார் பாரதி
கடந்த வாரம் மோடி தலைமையிலான அரசு பிரச்சார் பாரதிக்காக புதிய தேர்வாணையத்தை உருவாக்கியது. அதன் தலைவராக ஜெகதீஷ் உபாசனா எனும் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளரை நியமித்துள்ளது. ஜெகதீஷ் உபாசனா ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கைகளான ஆர்கனைசர் மற்றும் பஞ்ச்ஜன்யா-வின் (Organiser and Panchjanya) ஆசிரியராக பணியாற்றியவர்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் Indian Institute of Mass Communication நிறுவனத்திற்கு சஞ்சய் திவேதி என்பவர் கடந்த ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிசாத்தின் (ABVP) முக்கியப் பொறுப்பில் இருந்தவர். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் இந்த ABVP அமைப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் திவேதி-யின் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவுத் துறையினர் பல மோசடிகளுக்காக பதிந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது.
இந்திராகாந்தி தேசிய கலை மையம்
இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சச்சிதானந் ஜோஷி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கல்வி மற்றும் கற்பித்தல் பிரிவின் தேசிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் உள்ள இந்துத்துவா சக்திகள்தான புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றினார்கள். இவர்கள் இந்தியாவின் பன்முக வரலாறு மற்றும் கலாச்சாரத்தைத் தவிர்த்துவிட்டு வேத, சமஸ்கிருத பண்பாட்டை மையப்படுத்தும் பாடத்திட்டங்களை உட்புகுத்தியவர்கள்.
மத்திய பண்பாட்டு வள பயிற்சி மையம்
மத்திய பண்பாட்டு வள பயிற்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹேமலதா என்பவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நுண்கலைப் பிரிவான சன்ஸ்கார் பாரதி-யில் பொறுப்பாளராக இருந்தவர். இந்த சன்ஸ்கார் பாரதி அமைப்பு இந்தியா முழுவதும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நுண்கலைக் கல்லூரிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு நியமிக்கப்படும் பேராசிரியர் பதவிகளுக்கு தன் இயக்கத்தவர்களை உள்நுழைத்து வருகிறது. நுண்கலை கல்லூரிகளில் தொடர்ச்சியாக நடக்கும் சாதி, மத புறக்கணிப்பிற்கு இந்த அமைப்பின் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளே காரணம்.
ஹேமலதா
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில்
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் (INDIAN COUNCIL FOR CULTURAL RELATIONS) தலைவராக வினய் சகஸ்ரபுத்தே என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் தேசிய துணைத் தலைவர். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ABVP-ன் முழுநேர பொறுப்பாளராக தனது அரசியல் பணியைத் துவங்கியவர். பின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பல ஆண்டுகள் முழுநேர ஊழியராக இருந்து பாஜக-வில் சேர்ந்தவர்.
மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளின் தலைவர்களாக ஆர்.எஸ்.எஸ்-காரர்களை மோடி அரசு நியமித்து வருகிறது. இந்தியாவின் பன்முக கலச்சாரத்தை மறுக்கும் நோக்கம் கொண்ட இந்துத்துவ சித்தாந்தவாதிகளின் பிரதிநிதிகள் இதுபோன்ற பதவிகளில் திட்டமிட்டு அமர்த்தப்படுவது இந்தியாவின் மதச்சார்பின்மையையும், “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தத்துவத்தினையும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது.