இந்தியப் பொருளாதாரத்தில் MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமானது. எனவே அதன் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உற்பத்தி, ஏற்றுமதி, சேவை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு பொருளாதாரக் கூறுகளில் MSME கணிசமான பங்காற்றி வருகிறது. கடந்த காலங்களில் குறிப்பாக பணமதிப்பிழப்பு மற்றும் GST வரிவிதிப்பிற்குப் பிறகு MSME நிறுவனங்கள் பெருமளவிற்கு முடங்கியிருந்தன. பணப்புழக்கம் இல்லாமல் கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் கொரானா ஊரடங்கு MSME நிறுவனங்களை மேலும் மோசமான பாதிப்பில் தள்ளியுள்ளது.
புதிய வரையறை என்ன சொல்கிறது?
இந்த சூழ்நிலையில்தான் கடந்த மே13-ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் MSME நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி வங்கிக் கடன் அரசு உத்தரவாதத்துடன் தரப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே MSME-யின் அடிப்படை வரைவு குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் தொடர்ச்சியாக விவாதத்தில் உள்ளது. சர்வதேச மட்டத்தில் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கழகம் (international Finance corporation) ஆகியவை வேலைவாய்ப்பு, சொத்து மற்றும் விற்பனை அளவை அடிப்படையாக வைத்து MSME நிறுவனங்களின் வரைவை முடிவுசெய்தது. இந்தியாவில் இது குறித்தான முதல் வரைவு MSME Development Act 2006 வெளியிட்டது.

அதில் தொழிற்கூடம் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள மூலதனத்தை அடிப்படை அளவீடாக வைத்து MSME நிறுவனங்களுக்கான வரைவு முடிவு செய்யப்பட்டது. அந்த வரைவுகளில்தான் இப்போது ஒன்றிய அரசு பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. இந்த புதிய மாற்றத்தில் முதலீட்டு மதிப்புடன் விற்பனை வருவாய் அளவை (composition of both turnover and investment in plant and machinery) சேர்த்துள்ளது. அதேபோல் உற்பத்தித் துறைக்கும், சேவைத் துறைக்குமான முதலீட்டு வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஒற்றைத் தன்மைக்குள் கொண்டுவந்துள்ளது. விற்பனை அளவை (turnover) அளவுகோலாக சேர்ப்பதினூடாக பல்வேறு பெரிய நிறுவனங்கள் MSME வரையறைக்குள் உள்ளிழுக்கப்படும். இதனால் ஏற்கனவே உற்பத்தியில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் போட்டிபோட முடியாமல் மூடப்படும் நிலை ஏற்படும்.
இதையும் படிக்க : MSME – அலங்கரிக்கப்பட்ட அட்டைக் கத்தியாக பாஜக அரசின் அறிவிப்புகள்
2018-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட MSME Development (Amendment) Bill 2018-ல் விற்பனை அளவை மட்டும் ஒற்றை அளவுகோளாக வைத்து MSME நிறுவனங்களை வரையறை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. GST நடைமுறைக்குப் பிறகு விற்பனை அளவை அடிப்படை அளவுகோளாக வைப்பது அரசுக்கு மிக எளிய நடைமுறையாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இது சிறு, குறு நிறுவனங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று விமர்சிக்கப்பட்டது.
வரையறை மாற்றத்தின் விளைவு
இப்போது செய்துள்ள மாற்றத்தில் விற்பனை அளவானது, முதலீட்டைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த மாற்றம் MSME நிறுவனத்தின் மாறுபட்ட இயல்புகளைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வைர பொருட்களின் உற்பத்தியில் தொழிற்கூடம் மற்றும் சாதனங்களில் மிகக்குறைந்த முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் அதன் விற்பனை வருவாய் அளவு மிக அதிகம். ஆனால் தோல் உற்பத்தியில் தொழிற்கூடம் மற்றும் சாதனங்களில் முதலீடு மிக மிக அதிகம். அதன் விற்பனை விற்பனை அளவு குறைவு. எனவே இதுபோன்ற மாறுபட்ட இயல்புகளைப் பொருட்படுத்தாமல் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் MSME நிறுவனங்கள் உருவாக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தான ஒரு உறுதியான பார்வையில் இந்த மாற்றம் நிகழ்த்தப்படவில்லை.
MSME வேலை வாய்ப்பில் குறு நிறுவனங்களின் பங்கு
2018-19ம் ஆண்டு MSME அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏறத்தாழ 634 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்படாத MSME நிறுவனங்கள் உள்ளன. அதில் 11.1 கோடிக்கு அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள். 94% சதவீதத்திற்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்படாதவைதான். இந்த பதியப்படாத நிறுவனங்களில் 99.5% நிறுவனங்கள் குறு தொழிலை அடிப்படையாகக் கொண்டவைதான். இந்த குறு தொழில்தான் பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியப் பொருளாதாரத்திற்கு அடிப்படையானது. இந்த வகையில் குறு நிறுவனங்கள்தான் 1076.19 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்பை வழங்குகிறது. இது ஒட்டுமொத்த எம்.எஸ்.எம்.இ தொழில் உருவாக்கும் வேலைவாய்ப்பில் 97 சதவீதமாகும்.

எனவே குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக ஆக்கப்பூர்வமான சிறப்பு ஏற்பாடுகள் அவசியமான ஒன்று. ஆனால் அதுகுறித்து ஒன்றிய அரசு பொருட்படுத்தாமல் இந்த மாறுதல்களை செய்துள்ளது. வேரைப் பொருட்படுத்தாமல் கிளைகளும் இலைகளும் பயன்பட்டால் போதும் என்ற முறையில் உள்ளது ஒன்றிய அரசின் அரசின் செயல்பாடு. 25 லட்சம் முதலீட்டை அடிப்படையாக கொண்ட குறு நிறுவனங்களை புதிய வரையறையின் படி 1 கோடி முதலீடு மற்றும் 5 கோடி விற்பனை அளவு என்ற வட்டத்திற்குள் தள்ளியுள்ளது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் வரையறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் குறு நிறுவனங்களின் எதிர்காலத்தினை இக்கட்டான இடத்திற்கு தள்ளியுள்ளது.