ஸ்டான் சுவாமி

ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?

ஸ்டான் சுவாமிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துக்கும் என்ன பிரச்சனை?

கெளரி லங்கேஷ்க்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்ததோ..

கோவிந் பன்சாரேவுக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ..

நரேந்திர தபோல்கருக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. அதே பிரச்சனை தான்..

யாரெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று பார்ப்பனியத்தையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் எல்லாம் சட்ட ரீதியாவோ சட்டத்துக்கு புறம்பாகவோ பழிவாங்கப்படுகிறார்கள்.

பழங்குடிகளுக்காக ஒலித்த குரல்

இந்தியாவின் கனிம வளங்களில் 40% ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 39.1%  மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். கார்ப்பரேட் நலன்களுக்காக நசுக்கப்படும் இந்த ஆதிவாசி மக்களுக்காக ஸ்டான் சுவாமி குரல் கொடுத்து வந்தார்.

1996 இல் Uranium Corporation India Limited சசிபா என்ற இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கவிருந்த கழிவுத் தொட்டிகளால் (tailing dam) மக்கள் வெளியேற்றப்படும் அபாயத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட Jharkhand Organisation Against Uranium Radiation (JOAR) போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆதிவாசிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் உட்பட, இயற்றப்பட்டுள்ள பல சட்டங்கள் நிஜத்தில் அமல்படுத்தப்படாமல் மத்திய, மாநில அரசாங்களால் புறக்கணிப்பட்டு வருவதையொட்டி பல போராட்டங்களை ஸ்டான் சுவாமி முன்னெடுத்தார்.  

2010-ம் ஆண்டு ‘Jail Mein Band Qaidiyon ka Sach’என்ற புத்தத்தை எழுதி வெளியிட்டார். அதில் ஆதிவாசி இளைஞர்கள் எப்படி மாவோயிஸ்டுகள் என்று போலியாக குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாமல் சிறையில் தள்ளப்படுவதைப் பற்றி விரிவாக எழுதினார். இவை அனைத்தும் கனிம வளங்களை கார்பரேட்டுகளுக்கு விற்க நினைத்த மத்திய-மாநில அரசாங்கங்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருந்து வந்துள்ளது. இதுவே இவர் குறிவைக்கப்பட காரணம்.

பீமா கொரோகான் வன்முறையும் இந்துத்துவ சக்திகளின் அராஜகமும்

மராட்டியத்தில் சித்பவன் பார்ப்பனர்களின் தலைமையிலான பேஷ்வாக்களை எதிர்த்து 1818-ல் போரிட்ட ஆங்கிலேயர் படைகளில் தாழ்த்தப்பட்ட மஹர் சாதியைச் சேர்ந்த மக்கள் இணைந்து பேஷ்வா படைகளை பீமா கோரேகான் என்ற இடத்தில் வெற்றி பெற்றார்கள். பேஷ்வாக்களிடம் தாங்கள் அனுபவித்த ஒடுக்குமுறையையும், போரில் செய்த தியாகங்களையும் நினைவுகூரும் பொருட்டே ஒவ்வொரு ஆண்டும் பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள் கூடுகின்றனர்.

போர் நடந்து 200 ஆண்டுகள் நினைவாக 2018-ல், ”எல்கார் பரிஷத்” என்ற மாநாடு கூட்டப்படுகிறது. நாடு  முழுவதும் இருந்து கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் பங்குபெற்ற அந்த மாநாடு ஆர்.எஸ்.எஸ் இன் தாய் மடியான சித்பவன் பார்ப்பனர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. டிசம்பர் 31, 2017 அன்று மாநாடு நடைபெறுகிறது. ஜனவரி 1, 2018, பீமா கோரேகானில் மக்கள் கூடிய நிகழ்வில் இந்துத்துவ வலதுசாரி சக்திகளால் கலவரம் ஏற்படுத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களின் கடைகள், உடைமைகள் குறிவைக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கான பல்வேறு நேரடி சாட்சியங்கள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தான்  தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையிலான மாநில பாஜக அரசாங்கத்தின் கோவம் திரும்பியது. 300-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் மும்பையில் மட்டுமே கைது செய்யப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடத் துவங்கியது மகாராஷ்டிரா அரசு.

ஆர்.எஸ்.எஸ் Think Tank-ன் அறிக்கை

இந்த நிலையில் தான் ”Forum for Integrated National Security” என்ற பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் Think Tank ஒன்று எல்கார் பரிஷத் மாநாட்டை ஒருங்கிணைத்தவர்கள் மாவோயிஸ்ட்கள் என்றும், அவர்கள் மக்களை தேசத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்த ஒருங்கிணைப்பதாகவும் மார்ச் மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த Think Tank அறிக்கையின் சாராம்சத்தை பூனே காவல் துறையும் நீதிமன்றத்தில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி அச்சுபிசகமால் அப்படியே ஒப்பித்தது.

கைது செய்யப்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள்

பீமா கோரேகான் கலவரத்தில் ஈடுபட்ட ஹிந்துத்வவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்துக் கொண்டிருந்த நேரத்தில்,  நாடு முழுவதும் உள்ள பல்வேறு அறிவு ஜீவிகளின் வீட்டில் பூனே காவல் துறை சோதனையில் ஈடுபட்டது. எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல் நடைபெற்ற இந்த சோதனையில், பீமா கோரேகான் கலவரத்தை விசாரிப்பதற்காக மஹாராஷ்ட்ர அரசாங்கம் நியமித்திருந்த ஆணையத்திடம் அளிப்பதற்காக சேகரிக்கப்பட்டிருந்த ஆவணங்களை எல்லாம் காவல் துறை எடுத்துச் சென்றது. மறுபடியும் ஜூன் மாதம் இதே போல் காவல் துறை சோதனையில் ஈடுபட்டது. இதில் ஐந்து செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரிபப்ளிக் டிவிக்கு தகவல் கிடைத்தது எப்படி?

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரோனா வில்சன் என்பவரின் கணினியில் இருந்து பல ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஜூன் 7 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கிறார். அடுத்த நாள் அர்னப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி  மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்ட ஒரு கடிதம் இந்த ஆவணங்களில் இருந்து போலீசிற்கு சிக்கியுள்ளதாக தலைப்புச் செய்தி வெளியிட்டது. நீதிமன்றத்திடம் கூட ஒப்படைக்கப்படாத அந்த கடிதம் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் கிடைத்தது. வில்சன் கணினியில் இருந்து கிடைத்த ஆவணங்களில் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா போன்ற பல மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி இன்னொரு செய்தியையும் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தான் சுதா பரத்வாஜ், நவ்லகா, வரவர ராவ் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து சிக்கிய ஆவணத்தில், மாவோயிஸ்ட்கள் பாரீஸ் நகரத்தில் சந்தித்து, எப்படி இந்திய அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டியதாகவும் அதற்கும் ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து ஆயுதம் வாங்கத் திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பூனே காவல்துறை குற்றம் சாட்டியது.

2020 அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

இதே காலக்கட்டத்தில் தான் ஸ்டான் சுவாமியின் இல்லம் இரண்டும் முறை காவல்துறை அதிகாரிகளால் சோதனையிடப்படுகிறது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. நவம்பர் 2019-ல் மகாராஷ்ட்ராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உத்தவ் தாக்ரே முதல்வராகிறார். உடனே ஜனவரி 2020-ல் இந்த வழக்கு National Investigating Agency’விடம் ஒப்படைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து NIA இரண்டு முறை ஸ்டான் சுவாமியிடம் விசாரணை மேற்கொள்கிறது. அக்டோபர் 2020 இல் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கணினியில் நுழைக்கப்பட்ட ஆவணங்கள்

கைது செய்யப்பட்டவர்கள் கணினியில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் போலியனாவை என்றும், அவை வெளியில் இருந்து கணினியில் உரிமையாளர்களுக்கே தெரியாமல் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. ஆனாலும் NIA இவை எவற்றையும் கணக்கில் கொள்ள மறுக்கிறது.

உடல்நிலை மோசமடைந்தபோதும் மறுக்கப்பட்ட பிணை

ஸ்டேன் சுவாமியில் உடல் நிலை மோசமடைந்த சூழலில் அவருக்கான பிணையை விசாரித்த NIA சிறப்பு நீதிபதி, தனி மனித சுதந்திரத்தை விட சமூக நலனே முக்கியம் (”Community interest outweighs right of personal liberty”) என்று காரணம் கூறி பிணையை நிராகரித்தார்.  எந்தச் சமூகத்தின் நலன் என்று தான் தெரியவில்லை!

மருத்துவமனையில் ஸ்டான் சுவாமி அவர்கள்

UAPA மற்றும் NIA சட்டத் திருத்தங்கள்

ஸ்டான் சுவாமியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ் ஒரு பக்கம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வழமையாக ஹிந்த்துவ இயக்கங்கள் பிற மதத்தவர்கள் மீது சொல்லும் ”மதமாற்ற” அவதூறை இவர் மீதும் பரப்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ராகுக் காந்தி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்கள் ஆட்சிக் காலங்களில் UAPA, NIA போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றியும் கூர் தீட்டியும் வந்துள்ளனர். ஏன் 2019 NIA சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு திமுகவும் கூட ஆதரவாகத் தான் வாக்களித்தது.

ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது?

ஒரு ஆர்.எஸ்.எஸ் Think Tank கட்டிவிட்ட கதையை, அதிகாரப்பூர்வமாக்கி, நாட்டின் முன்னணி செயற்பாட்டாளர்கள் பலரைக் கைது செய்து அதில் ஒருவரின் உயிரைப் பறித்திருக்கிறது இந்த அரசு. ஆம் ஸ்டான் சுவாமியின் மரணத்தை ஒரு காவல் படுகொலையாகவே பார்க்கப்பட முடியும் என்பதே மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஸ்டான் சுவாமியை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு 10 நாட்கள் தாமதித்தாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருக்கிறார். ஸ்டான் சுவாமியின் மரணம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஒருநாள் கூட சிறையில் வைப்பதற்கான குற்றமும் இல்லாத நிலையில் UAPA என்ற கொடூரமான தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்தி இன்று ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. 

References:

1. https://scroll.in/article/892850/from-pune-to-paris-how-a-police-investigation-turned-a-dalit-meeting-into-a-maoist-plot

2. https://scroll.in/article/892586/a-month-before-police-raids-security-think-tank-report-alleged-maoist-link-to-bhima-koregaon-events

3. https://cjp.org.in/fr-stan-swamy-the-jharkhand-priest-who-made-people-his-religion/

– அருண் காளிராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *