சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று – Madras Radicals
சிவகங்கை பாளையத்தின் பாளையக்காரர் முத்துவடுகநாதர் வெள்ளையர்களால் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகளான மருது பாண்டியர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்.
கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு வரவேற்பும், ஆதரவும் கொடுத்த மருது சகோதரர்களை ஆட்சியில் இருந்து நீக்க வழிதேடிய ஆங்கிலேயர்கள் சிவகங்கைச் சீமையில் மன்னர் வம்சாவளியின்படி மருது சகோதரர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என்று சொல்லி, அதனால் மக்கள் யாரும் மருது சகோதரர்கள் ஆட்சிக்கு கீழ்ப்படியத் தேவையில்லை என ஆங்கிலேய அதிகாரி கர்னல் அக்னியூ உத்தரவை வெளியிட்டார்.


இதனை மறுத்து திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கம் கோயில் வாசலிலும் மருது சகோதரர்கள் பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர். வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்த மக்களைத் திரட்டுகிற அந்தப் பிரகடனம் தான் வரலாற்றில் ஜம்புத் தீவுப் பிரகடனம் என அழைக்கப்படுகிறது.
இந்தியத் துணைகண்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிடப்பட்ட முதலாவது விடுதலைப் போருக்கான பிரகடனம் இதுதான்.
ஜம்புத் தீவு பிரகடனம்


”ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.
உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்… ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.
இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.
எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள். எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்.”
என்று எழுதப்பட்டு இப்படிக்கு பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி. மருது பாண்டியர் என்று குறிப்பிட்ட கடிதம் தான் போர் பிரகடனமானது. சிவகங்கை போர் என்று சொல்லப்படும் முதல் சுதந்திர போர் 1801-ம் ஆண்டு ஜூலை 14 அன்று துவங்கி மிக உக்கிரமாக நடந்தது.
திருப்பத்தூர் படுகொலை
இறுதியில் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் விருப்பாட்சி கோபால் நாயக்கர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதே காலகட்டத்தில் மருது பாண்டியர்களுக்கும் அடுத்தடுத்த பின்னடைவு ஏற்பட்டது. ஆங்கிலேய படை மருது பாண்டியர்களின் குடும்பத்தினரை அடுத்தடுத்து படுகொலை செய்தது.
1801-ம் ஆண்டு அக்டோபர் 19-ல் மருது பாண்டியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1801 அக்டோபர் 24-ல் திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு மருதிருவர் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் 500-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்தனர். ஆயிரகணக்கானவர்ககளை நாடுகடத்தினர்.
சிவகங்கைச் சீமையின் மாவீரர்கள் துக்கிவிடப்பட்ட நாள் இன்று.