ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்

கோரோனா பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய ஊதியமும், பணி நிரந்தரமும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர் சங்கதினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் 2015-ம் ஆண்டில், மருத்துவத் தேர்வாணையம் (Medical Recruitment Board – MRB) மூலம் 7500 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களில்  3500 பேருக்கு இன்னும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிட  வேண்டும்.

அவர்கள் வெறும் 14 ஆயிரம் ரூபாயை  மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். இது கடுமையான உழைப்புச் சுரண்டலாகும். 2019-ம் ஆண்டு மீண்டும் அடுத்த எம்.ஆர்.பி தேர்வு வைத்து ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2000 பேருக்கும், 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார்  2000க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில், மக்களின் நலனுக்காக தன்னுயிர் மற்றும் குடும்பம் பற்றி கவலைப்படாமல் ,வெறும் ரூபாய் 14000 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு ,தற்காலிக செவிலியர்கள் அனைவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களில் பலருக்கு, அந்த குறைந்த ஊதியமும் ,கால தாமதமாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சேர்த்து வழங்கப் படுகிறது. அவர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ( Earned Leave ,Medical Leave ) விடுப்பு போன்ற இதர சலுகைகள் இல்லை.   இது பெரும் உழைப்பு சுரண்டல் ஆகும்.

இத்தகைய அவல நிலையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு, இனியும் பணி நிரந்தரம் வழங்கிடாமல் கால தாமதம் செய்வது சரியல்ல.

ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதிலும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் கூட பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்த எந்த செவிலியரையும் பணி நீக்கம் செய்திடக் கூடாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா பணிக்காக, செவிலியர்களுக்கு  ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூபாய் 20,000 ம் ஊக்கத் தொகை அறிவித்தார். அது வரவேற்புக்குரியது. அந்த ஊக்கத் தொகையை எந்தப் பாகுபாடுமின்றி  அனைத்து செவிலியர்களுக்கும் வழங்கிட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

எம்.ஆர்.பி மூலம் நியமிக்கப்படும் செவிலியர்களை நிரந்தர அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

சென்ற ஆண்டு கொரோனா தீவிரமாக பரவத் தொடங்கியக் காலக்கட்டத்தில், செவிலியர்களுக்கு முகக் கவசம், பாதுகாப்புக் கவசம் மற்றும் கையுறைகள் போன்றவை முறையாக வழங்கப்படவில்லை.இவற்றை முறையாக  வழங்கிடக் கோரி,தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செவிலியர்கள்,தவிர்க்க முடியாமல் போராட்டங்களை நடத்தினர்.அதே போன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும்  தர்ணாப் போராட்டம் நடந்தது.

அப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவ அதிகாரிகள் தற்பொழுது முயல்வது சரியல்ல.இந்த பழிவாங்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.  என்று கூறியுள்னர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ,சங்கத்தின் கௌரவத் தலைவர் டாக்டர்  ஜி.ஆர். இரவீந்திரநாத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி  துவக்கி வைத்தார். லேப் டெக்னீசியன் சங்கத் தலைவர் தனவந்தன்.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *