கீழ் பவானி ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் கசிவுநீரை 100 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பெருந்துறையில் திருவாச்சி கிராமத்தில் புதிதாக உருவாக்கும் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டையில் சேமிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த கசிவுநீரைப் பாசனம் செய்துவந்த கீழ்பவானி விவசாயிகளிடம் இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய திட்டம்
சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மிகப்பெரிய திட்டமாக கீழ்பவானி அணைத்திட்டம் 1948-ல் அறிவிக்கப்பட்டது. மோயாறு, பவானி ஆறுடன் இணையும் இடத்தில் இந்த அணை கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி பாசனப் பகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கரும், கொடியேறி பாசனப் பகுதியில் 24,500 ஏக்கரும், காளிங்கராயன் கால்வாய் மூலம்
15,400 ஏக்கரும் பாசனம் பெறுகிறது.
பவானிசாகர் அணைக்கு முன்பும் பின்பும்
கீழ்பவானி அணைக்கட்டு கட்டுவதற்கு முன் மானாவாரி நிலமாகவும், கால்நடைகளுக்கு தேவையான மரங்களும் புற்களும் வளரக் கூடிய மேய்ச்சல் நிலமாகவும், வறட்சியான வானம் பார்த்த பூமியாகவும் இருந்த நிலப்பகுதி 1957-ல் அணை பயன்பாட்டிற்கு வந்தபின் நஞ்சை பூமியாக மாறியது.
அணை வந்த பிறகு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நஞ்சை விவசாயமும், அதன் பின் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் கடலை, எள்ளு, சோளம் என புஞ்சை விவசாயமும் நடைபெறும் பகுதியாகவும் இந்த நிலம் இருந்து வருகிறது. இவை இல்லாமல் வாழை, கரும்பு, மஞ்சள் என்று ஆண்டு பயிர்களும் மிக அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான ஈரோடு மஞ்சள் விளைவது இந்த கீழ்பவானி பாசன பகுதியில்தான்.
ஆரம்பத்தில் நஞ்சைக்கு இருந்த முக்கியத்துவத்தை விவசாயிகள் காலப்போக்கில் மஞ்சள் மற்றும் கரும்பு விவசாயத்திற்கு கொடுத்துள்ளனர். இந்த பணப்பயிர் சாகுபடி, இந்த நிலப்பகுதியின் கிராம மற்றும் நகர்ப் புறங்களில் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு
பவானி ஆற்றில் சராசரியாக ஆண்டுக்கு 60 முதல் 70 டி.எம்.சி நீர்வரத்து இருப்பதாக அளவிடப்படுகிறது. இதில் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு உட்பட்ட 24,500 ஏக்கருக்கு இரு போகத்துக்காக 16 டி.எம்.சி நீரும், காளிங்கராயன் கால்வாய் பாசனத்துக்கு உட்பட்ட 15,400 ஏக்கருக்கு 10 டி.எம்.சி நீரும் தேவைப்பட்டு வந்த நிலையில் நடுவர் மன்றத்தில் இரண்டுக்கும் சேர்த்தே 8.13 டி.எம்.சி நீர் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
அதேபோல கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கருக்கு இருபோக பாசனத்துக்கு 36 டி.எம்.சி நீர் வேண்டும். ஆனால் 27.95 டி.எம்.சி மட்டுமே பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணையில் நீரின் அளவு குறையும்போது, அதற்கேற்ப சதவீத அடிப்படையில் அளவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கிட்டத்தட்ட 9 டி.எம்.சி தண்ணீரை இழந்த கீழ்பவானி விவசாயிகளுக்கு தற்போதைய கசிவு நீரையும் திசைமாற்றும் பெருந்துறை பேரூராட்சியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய சங்க பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை
இதுகுறித்து அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”கீழ்பவானி பாசனத்திட்டம் என்பது முறையாக வடிவமைக்கப்பட்டு 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி முதன்மை கால்வாயின் தொடக்கம் முதல் கடைசிவரை கிடைக்கும் கசிவுநீரைப் பயன்படுத்தும் வகையில் 33 கசிவுநீர் பாசனத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 33 கசிவுநீர் திட்டங்கள் மூலமாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 24,000 ஏக்கர் நிலங்கள் ஆயக்கட்டு பகுதியாக பதிவு செய்யப்பட்டு பாசன வசதி பெற்று வருகிறது. எனவே கீழ்பவானி கால்வாயிலிருந்து வெளியேறும் கசிவுநீர் எதுவும் வீணாக எங்கும் செல்வதில்லை. கீழ்பவானி கசிவு நீரைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட 33 திட்டங்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர்
ஆயக்கட்டில் சேர்க்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த 33 திட்டங்களும் வாய்க்கால் தொடங்கும் இடத்திலிருந்து வாய்க்கால் முடியும் வரை 126 மைல் தூரத்திற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழ்பவானி பாசனத் திட்டம் தமிழகத்திலேயே சிறந்த பாசனக் கட்டமைப்பு என்று காவிரி நடுவர் மன்றம் மதிப்பீடு செய்து தனது தீர்ப்புரையில் பதிவு செய்துள்ளது. கீழ்பவானி பாசன அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளை பொருட்படுத்தாமல் குறுகிய அரசியல் நலனுக்காக ஆயக்கட்டு பாசனப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட முனைந்துள்ளனர்.
கீழ்பவானி பாசன அமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விதிகளுக்கு முரணாக செயல்படுத்தும் திட்டங்களை தடுத்து நிறுத்தாமல் மௌனமாக உள்ளனர்.
சட்டத்தின் ஆட்சி முறையாக நடந்தால்தான் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியும். ஆளும் கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தனது பகுதி நலனுக்காக ஒரு பாசன அமைப்பை சீர்குலைக்கும் வகையில் 24,000 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி கொடுக்கும் பெரும்பள்ளம் ஓடைத்
திட்டத்தை மறித்து தண்ணீரை மின்மோட்டார் வைத்து
ஆயக்கட்டில் இல்லாத பெருந்துறை பகுதிக்கு தண்ணீர் கொண்டு
செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது திருவாச்சியிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் கீழ்பவானி பாசன விதிகளுக்கு எதிரானதாகும்.
36 டி எம்.சி தண்ணீரைக் கொண்டே கீழ்பவானி பாசன நிலங்கள் முழுமைக்கும் பாசன வசதி கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. கடைமடைப் பகுதியில் தற்போதைய நிலையிலேயே தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி செய்ய இயலாத நிலையில் உள்ளனர். தன்னல நோக்கோடு ஆங்காங்கே இது போல ஆயக்கட்டுப் பகுதிக்கு உட்பட்ட தண்ணீரை பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றால் கீழ்பவானி பாசனக் கட்டமைப்பு சீர்குலைந்து விடும்.மேலும் மக்களின் அமைதி வாழ்க்கை கெட்டுவிடும்.
எனவே தமிழ்நாடு அரசு ஆயக்கட்டு பாசனப் பகுதிகளை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களை கீழ்பவானி ஆயக்கட்டு பகுதிக்குள் செயல்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என கீழ்பவானி பாசனப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.”
என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே பெருந்துறை சிப்காட்டில் கொகொ கோலா நிறுவனம் துவங்குவதை மக்கள் போராடி தடுத்தனர். இப்பொழுதும் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களின் தேவைக்காக விபசாயிகளுக்கு சேரவேண்டிய தண்ணீரைப் பறிக்கத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.