நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியினர் அச்சுறுத்தி வருவதால் ட்விட்டரில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊடக சுதந்திரம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பல்வேறு சமூக ஆர்வலர்களும், இணையவாசிகளும் பதிவிட்டு வருகிறார்கள்.
அதன் காரணமாக #SaveJournalism #StandWithNews18TN எனும் இரண்டு ஹேஷ்டேக்-கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஊடகவியலாளர்களைக் குறித்து அவதூறு பரப்புவது, அவர்களை மறைமுகமாக மிரட்டுவது என பல வேலைகளை பாஜகவின் நிர்வாகிகள் செய்து வருவதாகவும், இப்போது அதன் உச்சகட்டமாக நியூஸ்18 தமிழ்நாடு குழுமத்தில் பணிபுரியும் முக்கிய ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அச்சுறுத்தலை பாஜக அளித்துவருவதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக-வின் பிரச்சாரகர்களாக சமூக வலைதளங்களில் இயங்கி வரும் மாரிதாஸ் எனும் நபரைப் பயன்படுத்தி பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் இத்தகைய ஊடக சுதந்திரப் பறிப்புக்கான பிரச்சாரத்தினை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் நியூஸ் 7 தமிழ் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து யார் யாரை விவாத நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதேபோல் தமிழ்நாட்டின் சமூக அரசியலில் இயங்கி வரும் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்களின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு, இவர்களையெல்லாம் எந்த விவாத நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கக் கூடாது என்று பாஜக நிர்வாகிகள் ஊடக நிர்வாகங்களிடம் பேசி அழுத்தம் கொடுத்து வருவதாக ஊடக வட்டாரங்களில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் வட இந்திய ஊடகங்களில் சிலவற்றைப் போலவே, பாஜக என்ன விரும்புகிறதோ அவைதான் தமிழ் ஊடகங்களின் செய்திகளில் வர வேண்டும் என்று பாஜக தலைமை வேலை செய்து வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் கனகராஜ், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் லெனின் பாரதி, நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சனாதனவாதிகள் தமிழ் ஊடகங்களை குறிவைப்பதாக தொல்.திருமாவவளவன் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ஊடகத்தில் மோடியைத் தவிர வேறு எதைப் பற்றியும், எதிர்கருத்தைப் பேச உரிமையில்லை என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ், 2014 தேர்தலுக்கு முன், வீரபாண்டியன், The Wire இணையதளத்தின் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் வேட்டையாடப்பட்டனர் என்றும், 2019 தேர்தலுக்கு முன், ஊடகவியலாளர்களுடனான ரகசிய சந்திப்பை மோடி நடத்தியதாகவும், இப்போது 2021 தேர்தலுக்கு முன் ஊடகங்கள் மிரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதர ஊடகவியலாளர்கள் மற்றும் ட்விட்டர் வாசிகளின் கருத்துகள்