சீக்கியர் போராட்டம்

சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்

வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே.

தமிழ் மரபுக்கும் சீக்கிய மரபுக்குமான ஒப்புமைகள்

“இந்திய மறைஞானச் சிந்தன உருவாக்கத்தில் சித்தர்கள், சூஃபிகள், சந்தர்கள் ( சீக்கிய சந்த்மரபு – பொதி) ஆகியோர் முதன்மையான பங்களிப்புச்செய்தனர்” 

“நான் எனது எனப்படும் உணர்வால் இவ்வுலகம் அழிந்தது. அதனாலேயே தொடர்ந்து அழிகிறது (‘ குரு கிரந்தம் 555). மரபார்ந்த இந்திய இந்து வைதிக மரபுகளிலிருந்த வேறுவிதமாகச் சிந்தித்தது சீக்கியத் தத்துவம். பௌத்த மரபோடும் சில வேளைகளில் தமிழ் மரபோடும் அதற்கு ஒத்த நிலைப்பாடு உண்டு”
– ந.முத்துமோகன்

அதிகாரம் யாவினுக்குகே மூலவித்து அகங்காரமே. இறையியல் மெய்யியல் யாவுமே ஞானத்திற்கான வாயிலாகத் ‘தன்னையறித’லையே முன்நிறுத்துகின்றன. தன்னையறிதலின் முதற்படி என்பது அது தளைப்பட்டுக் கிடக்கும் ‘நான்’ எனும் தன்னகங்காரத்தைச் சுட்டேரிப்பதே. புறஅதிகாரம் யாவற்றிலிருந்தும் விடுபட அக அதிகாரமாம் அகங்காரத்திலிருந்து விடுபடலே முன்நிபந்தனை என்பதாகவே வலியுறுத்தப்படலாகின்றது. ‘நான்’ எனும் சிறையிலிருந்து விடுதலை பெற்றாலே ஞானம் வாய்க்கும்.

“ஞான் போயே ஞானம் வரு” – குஞ்ஞுண்ணி மாஸ்டர் 
‘யான் எனது’ என்னும் செருக்கறுக்கும் எனப் பேசும் வள்ளுவமே. இவற்றையே ‘ஹௌமைன்’ எனச் சுட்டும் சீக்கியம். சீக்கிய சமயம் ‘இதி மார்க்கமே’

“தன்னை நோக்கிய இயல்புடையவன்- அந்நியப்பட்டவன். ‘மன்முகன்’ எனப்பட்டான். ‘மன்முகன் என்பவன் வாழும் போதே செத்துப் போவான்’ என்பார் குரு ராமதாஸ். சர்வாம்ச உறவை ஏற்பவன் ‘குருமுகன்’. முழுமையிலிருந்து தன்னைப் பிரித்துக் காட்டும் போது ‘ஹௌமைன்’ தோற்றம் பெறும்”
– க.மகாலட்சுமி.

“ஹௌமைன் எனப்படும் தன்னகங்காரத்தை மனித வாழ்வின் மிகப்பெரிய கேடாகக் கணிக்கின்றது. மனித வாழ்வின் துன்ப துயரங்களுக்கும், கொடூரங்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாகச் சீக்கியம் ஹௌமைனைச் சுட்டிக் காட்டுகிறது”
– ந.முத்துமோகன்

இத் தொடர்பில் ‘அகந்தை அழிவை’ ஒரு வாழ்க்கை அனுபவமாகப் பௌத்தமும்; ‘கணவனும் அறியாக் கற்பு’ எனச் சைவசித்தாந்தமும் பேசி நிற்கின்றன:

“தான் எனும் அகந்தை அழியப் பௌத்தம் வழிகாட்டுகின்றது. தான் என்ற எண்ணம் மறையும்போது மனம்  தூய்மை அடைகிறது. உன்னத ஞானநிலை மனத்தில் இடம் பெறுகிறது. இது ஒரு தத்துவம் அல்ல. வாழ்க்கை அனுபவம்”
– ப.சுப்பிரமணியன் (‘ஜென் பௌத்தம்’)

“பலரைப் புணர்ந்தும் இருட்பாவைக்கு உண்டு என்றும் 
கணவர்க்கும் தோன்றாக் கற்பு”
– உமாபதி சிவம் (‘திருவருட் பயன்’)

“கற்புள்ள பெண்கள் பிற ஆடவர்களோடு சேரமாட்டார்கள். எனவே தம் சொந்தக் கணவர்களுக்கு மட்டுமே தம்மைக் காட்டி நிற்பர். ஆனால், ஆணவமலம் ஆகிய கற்புடைய இந்தப் பெண், தன் கணவனாகிய. தன்னைப் பற்றி நிற்கும் ஆன்மாவுக்குத் தன்னைக் காட்டாமலே இருப்பார்'”
– கு.வைத்தியநாதன் (‘சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கைககளும் குறியீட்டு மொழியும்’)

பொதுபுத்தியில் லௌகீகம் என்பது பாவிக்கப்படுவது போலல்லாமல் மெய்யியல் நோக்கில் சீக்கிய மரபு விதந்தோதி முன்னெடுக்கப்படுகிறது.

சீக்கிய மரபின் ’மீரிபீரி’ எனும் கோட்பாடு

“சீக்கியம் தனது தத்துவ முறையியல் நிலைப்பாட்டை ‘மீரிபீரி’ என்ற கோட்பாட்டின் மூலம் தெரிவிக்கின்றது. மீரி என்றால் உலகியல். பீரி என்ற சொல் (உலகைக் கடந்த) ஆன்மிகம் என்று பொருள்படும். உலகியலும் ஆன்மிகமும் முரண்பட்டவை அல்ல என்பது சீக்கியத்தின் நிலைப்பாடு. உலகியலும், ஆன்மிகமும் ஒன்றுபட வேண்டும் என்று அது கருதுகின்றது. அவை இரண்டும் ஒன்றை ஒன்று ஊடுருவுதல், ஒன்று மற்றொன்றின் மீது செல்வாக்கு செலுத்துதல், அவை தனித்த நிலையில் நிலவாமை ஆகியவை இக்கோட்பாட்டின் மூலம் உணர்த்தப்படுகின்றது. உலகியலின் உண்மைத்தன்மையை ஆன்மிகம் ஏற்கவேண்டும். உலகியலின் செயற்பாட்டுத்தன்மையை ஏற்பதாக ஆன்மிகம் உலகவாழ்வை ஊடுருவ வேண்டும். ஆன்மிகம் உலகியலாலும், உலகியல் ஆன்மிகத்தாலும் செழுமை பெறவேண்டும் என்று சீக்கியம் கருதுகின்றது”
– ந.முத்துமோகன்.

மீரிபீரி தத்துவ மனிதவடிவாய் சந்த்-சிப்பாய் என்ற லட்சிய மனிதனை முன்வைக்கின்றது என்றும், துறவி-இல்லறத்தான் எனும் முன்மாதிரிக்கு மாற்றாக ஞானி- போர்வீரன் எனுமாறு முன்னிறுத்துகின்றது எனவும் எடுத்துரைப்பார் சீக்கிய ஆய்வு முன்னோடியான ந.முத்துமோகன்.

சீக்கிய வைதிக எதிர்ப்பைப் பற்றிப் பேசுமுகமாக, “வைதிகமரபினரின் சமஸ்கிருத மொழித்தலைமையை ஏற்கவில்லை. குரு கிரந்தம் பஞ்சாபி (சாதாரண லட்டரமக்கள்) குருமுகி எழுத்துக்களில் ஒரு மாற்றுமொழியக்க முயற்சி” என்பார் க.மகாலட்சுமி.

இத்தகு சீக்கிய சந்த் மரபின் மீரிபீரிக் கோட்பாட்டின் புதுவெளிச்சத் திறப்புகளுக்கூடே இற்றைப்படுத்தி நோக்கும் போதுதான் இன்றைய பஞ்சாபி சீக்கியமரபினர் பாஜக காவிப்பாசிச அரசிற்கும், அதன் வேளாண் தடைச்சட்டங்களுக்கும் எதிராக மகத்தான, வீறெழுச்சி மிக்க வரலாறு காணாப் போராட்டத்தின் உட்கிடைகளை நம்மால் இனங்காண இயலும்.

மறுபக்கம் தமிழ் உழுகுடிப் போராட்ட ‘அய்யாக்கண்ணு அவலக்கதை மனத்தில் உறுத்தலாகின்றது! உழுகுடிப் போராட்டப் பாண்டியன் என்னானார்? எண்ணித்துணிக பஞ்சாப் மீரிபீரி ஞானி- போர்வீர மரபு நமக்கு வழிகாட்டுகின்றது விழித்தெழுவோம்!

குருநானக்கின் வைதிக எதிர்ப்பும் சகோதரத்துவமும்

தில்லிவாணரான ‘யதார்த்தா’ பெண்ணேஸ்வரன் இந்துமத நம்பிக்கைகள் உடையவர் அதனைக் கடந்து அவர் குருநானக்கை இனங்காணும் தரப்புகளும் ஒத்துறழ்ந்தே நோக்கத்தக்கன:

“15-ம் நூற்றாண்டிலேயே இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய மகான் குருநானக் தேவ் ஜி”

“மர்தானா என்று அழைக்கப்பட்ட இசுலாமியத் துறவியின் தொடர்பு ஏற்பட்டு ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபடலானார். 1496-ம் ஆண்டினை குருநானக் தேவ் ஜி ஞானம் பெற்ற ஆண்டாகக் குறிப்பிடுவார்கள். அவருடைய முதல் பிரகடனமே – ஹிந்து என்பவனோ அல்லது முஸல்மான் என்பவனோ யாரும் கிடையாது என்பதே.”

” சனாதனம் கற்பித்த தீண்டாமையை எதிர்த்து மிகப்பெரிய கலகத்தைத் துவங்கியவர் குருநானக் தேவ் ஜி. “

” மதங்கள் வலியுறுத்திய மூட நம்பிக்கைகளை முழுமூச்சுடன் எதிர்த்து செயல்பட்டவர் குருதேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் சமத்துவத்தை வலியுறுத்தியவர் குருநானக் தேவ் ஜி.”

“தன்னுடைய பயணங்களின் போது அவருக்கு தானமாகக் கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேகரித்து ஏழை எளியவர்களுக்கான ஒரு பொது சமையல் கூடத்தை உருவாக்கி எவ்வித வேறுபாடுகளும் இல்லாது அனைவரும் இணைந்து ஓரிடத்தில் உணவு உண்ணும் அற்புதமான முறையை முதன்முதலில் உருவாக்கியவர் குருநானக் தேவ் ஜி.”

“அவர் முதலில் அப்படி உணவு வழங்கிய ஸ்தலம்  ஸச்சா ஸெளதா (உண்மை வணிகம்) என்று அழைக்கப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்தப் பகிர்ந்துண்ணும் முறையே இன்று உலகில் உள்ள அனைத்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் லங்கர் என்கிற பெயரில் அற்புதத் தொண்டாகத் தொடர்ந்து வருகிறது.”

இந்த ‘லங்கர்’ முன்னெடுப்பு நம் ஞானவள்ளல் இராமலிங்கம் வடலூரில் ‘பசிப்பிணி மருத்துவனா’க மூட்டிவிட்ட அணையா அடுப்பையே நமக்கு நினைவூட்டுகின்றது!

“பயங்கரவாதம் பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் பலர் மனங்களில் தீராத வடுவை ஏற்படுத்தி இம்சித்தது. இவை எல்லாவற்றையும் எதிர்த்து மீறி, சீக்கிய சகோதரர்களும் சகோதரிகளும் நம்முடைய நாட்டின் வளமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.”
-‘யதார்த்தா’ பெண்ணேஸ்வரன்.

பெண்ணேஸ்வரன் ‘வடக்கு வாசல்’ என்ற சிற்றிதழைச் சிறப்பாக நடத்தியவர். வேதாத்திரியார் மரபைக் கொண்டாடுபவர். இத்தகு இந்துமத நம்பிக்கையாளர்களாலும் கொண்டாடப்படக் கூடியவராகத் திகழக்கூடியவரே குருநானக். எனவே இப்பதிவில் ஈரமிசங்கள் அவதானிக்கத்தக்கன:

தமிழ் மரபோடு ஒத்துணர்வு எனும் வகையில் குருநானக் இராமலிங்கர் ஒப்பீடு.

மற்றொன்று ஏனைய மதஞ்சாரா மரபினரை ஒடுக்குவது போல் ‘பாஜக’ வால் சீக்கிய மரபினரை ஒடுக்க முடியாமை!

‘தலைப்பாகை பத்திரம் உழவனே- உன்
தலைப்பாகை பத்திரம்’
‘பக்ரி ஜம்பால் பக்ரி ஜம்பால் ஓயே!’

தோழர் மருதையன் பார்வையில் சீக்கியத் தலைப்பாகையின் கதை

“போர்க்குணம் என்பது சீக்கிய விவசாயிகளின் சிறப்பியல்பு. அந்தப் போர்க்குணத்துக்கு ஒரு அரசியல் உள்ளடக்கம் உண்டு. வெகு நீண்ட வரலாற்றுப் பின்புலமும் உண்டு.”

“இன்று போராடும் விவசாயிகளின் ‘தேசிய கீதமாக’ பஞ்சாப் முழுவதும் ஒரு பாடல் பாடப்படுகிறது. காலனிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிறந்த அந்தப் பாடல், இன்று கார்ப்பரேட் தாசனான மோடி அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், வீரியத்துடன் மறுபிறப்பு எடுத்திருக்கிறது.”

“தலைப்பாகை பத்திரம் உழவனே,
உன் தலைப்பாகை பத்திரம்
(பக்ரி சம்பால் ஜட்டா, பக்ரி சம்பால் ஓயே) “
என்பதுதான் அந்தப் பாடலின் முதல் வரி.”

“இந்த கேடு கெட்ட அரசு, நம் கோரிக்கைகளை ஏற்கவில்லை. 
ஏன் அதற்குப் பணிய வேண்டும்?
கைகளை இணைப்போம்  எதிர்த்து நிற்போம்
கையொலி எழுப்புவோம் – அதிரட்டும்”

புதிய தாராளவாதக் கொள்கை பல இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. விவசாயத்தை விட்டே விரட்டியிருக்கிறது. எஞ்சியிருக்கும் விவசாயிகளைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக மாற்ற முனைந்திருக்கும் மோடி அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் விவசாயிகள். வழக்கம் போல இந்தப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறார்கள் பா.ஜ.க ஃபாசிஸ்டுகள்.

“விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ்தான் தூண்டி விடுகிறது” என்று குற்றம் சாட்டினார் அரியானா பா.ஜ.க முதல்வர் கட்டார். “இது காங்கிரசுக்கு வழங்கப்படும் தகுதிக்கு மீறிய கவுரவமாயிற்றே, இதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்களே” என்று கேலி செய்தார் ஒரு பத்திரிகையாளர்.

“பஞ்சாப்காரர்கள் மட்டும்தான் போராடுகிறார்கள், இதிலிருந்தே இந்தப் போராட்டத்தின் அரசியல் உள்நோக்கம் தெரியவில்லையா?” என்றார் அர்னாப் கோஸ்வாமி. அரியானா, ராஜஸ்தான், உ.பி, இமாச்சல் பிரதேஷ், ம.பி விவசாயிகள் தமது ஆதார் அட்டையை கேமராவுக்கு காட்டுகிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு சீக்கிய மூதாட்டியின் படத்தைப் போட்டு, “பார்த்தீர்களா, இந்தப் பாட்டிதான் டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்த சி.ஏ.ஏ எதிர்ப்புப் ‘போராளி’, பில்கிஸ் பானு. 100 ரூபாய் கொடுத்தால் எங்கே வேண்டுமானாலும் வருவாள்” என்று டிவிட்டரில் பதிவிட்டார் கங்கணா ரணாவத். அந்த மூதாட்டி பில்கிஸ் பானு அல்ல என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமானவுடன் சத்தம் போடாமல் அந்த ட்வீட்டை அகற்றினார் கங்கணா ரணாவத்.

“நாங்க இந்திரா காந்தியையே பார்த்தவங்கடா, எங்களுக்கு மோடி எம்மாத்திரம்?” என்ற பொருள்பட ஒரு விவசாயி பேசியதைப் போட்டு, இது காலிஸ்தானிகளின் போராட்டம் என்று பிரச்சாரம் செய்து பார்த்துத் தோற்றது ஜீ டி.வி.

போராட்டத்தில் பங்கேற்கும் AISA அமைப்பின் மாணவர்களைக் காட்டி  “பார்த்தீர்களா, JNU வின் துக்டே துக்டே கும்பல்” என்றார்கள்.  போராட்டத்தை ஆதரிக்கும் PFI அமைப்பினரைக் காட்டி, போராட்டத்தின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்றார்கள்.

சங்கிகள் எல்லாவிதமான பொய்ப் பிரச்சாரங்களையும் செய்து பார்த்து விட்டனர். எதுவும் எடுபடவில்லை.

டில்லி செல்லும் நெடுஞ்சாலை முழுவதும் தடுப்பரண்கள், கம்பி வேலிகள், பதுங்கு குழிகள், தடியடி, தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், எல்லைப் பாதுகாப்புப் படையைக் குவித்துப் பார்த்தனர். அந்த மாபெரும் மக்கள் திரள், தடுப்பரண்களைத் தூக்கி வீசிவிட்டு முன்னேறியது.

“டில்லியில் புராரி மைதானத்தை ஒதுக்கியிருக்கிறோம், அங்கே வரச் சம்மதித்தால், டிசம்பர் 3-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றது மோடி அரசு.

“புராரி என்பது சிறை. மூன்று சட்டங்களையும் ரத்து செய். ஜந்தர் மந்தருக்கு வருவோம். இல்லையேல், டில்லிக்குச் செல்லும் 5 சாலைகளையும் மறிப்போம்” என்று எச்சரித்திருக்கிறார்கள் விவசாயிகள்.

உறைய வைக்கும் டிசம்பர் குளிரிலும், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் காட்டி வரும் உறுதி, காவி காலிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமிர்ப் பேச்சு பேசிய சங்கிகள் பின்வாங்குகிறார்கள். “விவசாயிகள் போராட்டத்துக்கு அரசியல் பின்னணி உள்ளதுன்னு நான் சொல்லவே இல்லையே” என்று  ஜகா வாங்கியிருக்கிறார் அமித் ஷா.

“நாங்கள் விவசாயிகளை ஏமாற்றவில்லை. இந்த கங்கையின் கரையில் நின்று சொல்கிறேன். எங்களுடைய நோக்கம் இந்த கங்கையைப் போலப் புனிதமானது” என்று வழக்கம் போல பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார் மோடி.

“இவன் யார்டா … நிலவரம் புரியாம வழக்கம் போல பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டிருக்கான்” என்று பஞ்சாபின் கொட்டை போட்ட காங்கிரஸ் தலைகள் கவலைப்படுகிறார்கள். “ இந்தப் போராட்டம் விரைவிலேயே கை மீறிப் போய்விடும். எல்லாக் கட்சிகளும் மதிப்பிழந்து விட்ட பஞ்சாபில் இந்தப் போராட்டத்திலிருந்து புதிய ஆபத்தான தலைமைகள் உருவாகும்” என்று அவர்கள் அலறுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, நெடுவாசல், ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்து உங்களுக்கு நீங்களே குழி பறித்துக் கொள்ளாதீர்கள் என்று ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி துக்ளக் குருமூர்த்தி எழுதினாரே, அதனை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களுடைய அச்சம் அடிப்படை அற்றதல்ல. இந்தப் போராட்டம் நீண்ட நாள் தொடருமானால், கோரிக்கையின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, இந்தப் போராட்டத்தின் ஊடாக விவசாயிகள் மத்தியிலும், பஞ்சாப் சமூகத்திலும் ஏற்படக்கூடிய மாற்றம் என்பது அரசியல் ரீதியில் ஆபத்தானது என்பதே அவர்களது கவலை.

“கொள்முதலுக்கும், குறைந்தபட்ச விலைக்கும் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளித்து ஒரு அவசரச் சட்டத்தை இயற்றி, இந்தப் போராட்டத் தீயை உடனே அணைக்காவிட்டால்,  முதலுக்கே மோசமாகி விடும்” என்பது ஆளும் வர்க்க அறிவுத்துறையினரின் கவலை. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மூன்று சட்டங்களையும் தீவிரமாக ஆதரிப்பவரான பத்திரிகையாளர் சேகர் குப்தா, முட்டாள்களே, சீக்கியர்களின் வாலை முறுக்காதீர்கள் என்று மோடியையும் அமித் ஷாவையும் எச்சரித்திருக்கிறார்.

போர்க்குணம் என்பது சீக்கிய விவசாயிகளின் சிறப்பியல்பு. அந்தப் போர்க்குணத்துக்கு ஒரு அரசியல் உள்ளடக்கம் உண்டு. வெகு நீண்ட வரலாற்றுப் பின்புலமும் உண்டு.

இன்று போராடும் விவசாயிகளின் ‘தேசிய கீதமாக’ பஞ்சாப் முழுவதும் ஒரு பாடல் பாடப்படுகிறது. காலனிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிறந்த  அந்தப் பாடல், இன்று கார்ப்பரேட் தாசனான மோடி அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், வீரியத்துடன் மறு பிறப்பு எடுத்திருக்கிறது.

“தலைப்பாகை பத்திரம் உழவனே,
உன் தலைப்பாகை பத்திரம்
(பக்ரி சம்பால் ஜட்டா, பக்ரி சம்பால் ஓயே) “
என்பதுதான் அந்தப் பாடலின் முதல் வரி.

“இந்த கேடு கெட்ட அரசு, நம் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
ஏன் அதற்குப் பணிய வேண்டும்?
கைகளை இணைப்போம்  எதிர்த்து நிற்போம்
கையொலி எழுப்புவோம் – அதிரட்டும்”

“சுயமரியாதையை இழக்காதே உழவனே
தலைப்பாகையை மண்ணில் வைக்காதே
அடிமைத்தளையை நொறுக்கு
தலைவிதியை மாற்று
தலைப்பாகை பத்திரம் சீக்கியனே, தலைப்பாகை பத்திரம்!”

இந்தப்  பாடல் வரிகளுக்குள் பொதிந்திருக்கிறது பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட வரலாறு .

1907 – காலனியாதிக்க எதிர்ப்பு விவசாயிகள் கலகம்

1879: செனாப் ஆற்றிலிருந்து ஒரு பெரிய கால்வாயை வெட்டி, புதிதாகப்  பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை உருவாக்கி, தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ள பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது. நிலத்தைப் பண்படுத்தி விளைநிலமாக மாற்றுகின்ற ஒவ்வொரு விவசாயிக்கும் நிலம் சொந்தமாக்கப்படும் என்று ஆசை காட்டியது.

இந்த வாக்குறுதியை நம்பி பல்லாயிரக்கணக்கான சீக்கிய விவசாயிகள், இன்று பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் மேற்கு பஞ்சாபைச் சேர்ந்த பைசலாபாத் (அன்று லியால்பூர்) பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். புதிதாக 20 இலட்சம் ஏக்கர் நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டு வந்து பொன் விளையும் பூமியாக மாற்றினர்.

ஆனால், பிரிட்டிஷ் அரசு, வாக்களித்தபடி யாருக்கும் நிலம்  கொடுக்கவில்லை. “நிலமெல்லாம் பிரிட்டிஷ் அரசுக்குத்தான் சொந்தம்,  நீங்களெல்லாம் வெறும் குத்தகை விவசாயிகள்தான். நிலத்தில் குடிசை கூடப் போடக்கூடாது, மரம் வெட்டக்கூடாது. மீறுபவர்களின் குத்தகையை ரத்து செய்து வெளியேற்றுவோம். ஒரு குத்தகை விவசாயி இறந்து போனால், அவருடைய மூத்த மகனுக்குத்தான் குத்தகை உரிமை. மூத்த மகன் இறந்து விட்டால், இளையவனுக்கு அந்த உரிமை கிடையாது. அரசு வேறு குத்தகைதாரரை நியமிக்கும்” என்று புதிதாகச் சட்டம் இயற்றியது.

இந்த நம்பிக்கைத் துரோகத்துக்கும் அநீதிக்கும் எதிராக விவசாயிகள் குமுறினர். அந்தக் குமுறலை மாபெரும் எழுச்சியாக மாற்றியவர் அஜித் சிங் சந்து.

வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப், தற்போதைய போராட்டத்தின் வரலாற்றுப் பின்புலமாக அஜித் சிங்கின் போராட்டம் இருப்பதை நினைவு கூர்ந்திருக்கிறார். ‘Punjab: Journey through fault lines’ என்ற நூலில் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரித்திருக்கிறார் அமன்தீப் சந்து. பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட வரலாறு குறித்து சங்கீத் தூர், ‘வயர்’ தளத்திலும், ஹர்மீத் ஷா சிங், ‘இந்தியா டுடே’யிலும் எழுதி இருக்கின்றனர்.

1907 இல் லியால்பூரில் விவசாயிகளையும் முன்னாள் இராணுவத்தினரையும் அணி திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அஜித் சிங். கலகம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின் போது பங்கே லால் என்ற பத்திரிகை ஆசிரியர்,  மக்கள் மத்தியில் பாடிய பாடல்தான், “தலைப்பாகை பத்திரம் உழவனே, உன் தலைப்பாகை பத்திரம்” என்ற பாடல். அந்தப் பாடலின் உணர்ச்சி, அதையே விவசாயிகள் போராட்டத்தின் மைய முழக்கமாக மாற்றியது.

ராவல் பிண்டி, லியால்பூர், குர்தாஸ்பூர், லாகூர் போன்ற நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கலகம் வெடித்தது. அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் சூறையாடப்பட்டன. தொலைபேசி – தந்திக் கம்பிகள் அறுத்து எறியப்பட்டன.

1907 இல் அஜித் சிங்கும் லாலா லஜபதி ராயும்  கைது செய்யப்பட்டு பர்மாவிலுள்ள மண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர். போராட்டமோ சீக்கிய ராணுவத்தினர் மத்தியிலும் பரவியது. ராணுவம் விவசாயிகளைச் சுட மறுத்துக் கலகம் செய்தது.

கலகம் தீயாய்ப் பரவுவதைக்  கண்ட பிரிட்டிஷ் அரசு பணிந்தது. சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்தது. விவசாயிகளுக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. அஜித் சிங்கும் லஜபதி ராயும் விடுவிக்கப்பட்டனர். அஜித் சிங் போராட்ட நாயகனாக விவசாயிகளால் கொண்டாடப்பட்டார்.

பகத் சிங்கை உருவாக்கிய அஜித் சிங்!

அஜித் சிங் விவசாயிகள் போராட்டத்தின் தலைவர் மட்டுமல்ல, அவர் விடுதலை இயக்கத்தின் முன்னோடி. 1857 சுதந்திரப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டில் மீண்டும் அதே போன்ற ஒரு எழுச்சியை உருவாக்கி பிரிட்டிஷாரை விரட்ட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

இதற்காகப் பல சமஸ்தான மன்னர்களை ரகசியமாகச் சந்தித்து மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்குமாறு வலியுறுத்திப் பார்த்தார். நடக்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று அங்கிருந்த அதிருப்தியாளர்களைத் திரட்டி, பாரத மாதா சங்கம்  (உருதுவில் மகபூபானே வதன்) என்றொரு அமைப்பை உருவாக்கினார்.

அஜித் சிங்கை வெளியே விட்டு வைப்பது ஆபத்து என்று பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்திருந்தது. அவரது பத்திரிகை மீது ஒரு வழக்குப் போட்டு, அவரை மீண்டும் கைது செய்ய முனைந்தது பிரிட்டிஷ் அரசு. அஜித் சிங் ஈரானுக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் சென்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது, இத்தாலிய இராணுவத்தினரிடம் பிடிபட்ட, பிரிட்டிஷ் இந்தியச் சிப்பாய்கள் 10,000 பேரைத் திரட்டி சுதந்திர இந்திய ராணுவத்தை அமைத்தார். 40 ஆண்டுகள் வெளி நாடுகளிலேயே கழித்த அஜித் சிங், மத அடிப்படையில் நாடு துண்டாடப்படுவதையும், மதக் கலவரங்களையும் கண்டு மனமுடைந்த மனிதராக, 15 ஆகஸ்டு, 1947 அன்று காலையில் மரணம் அடைந்தார்.

அஜித் சிங் வேறு யாருமல்ல, மாவீரன் பகத் சிங்கின் சொந்த சிறிய தந்தை. அவர்தான் சிறுவன் பகத் சிங்கின் லட்சிய நாயகன். இன்று பஞ்சாப் விவசாயிகள் பகத் சிங்கின் படத்தை ஏந்திச் செல்வதற்கும், போராட்டத்தில் இந்தப் பாடல் பாடப்படுவதற்கும், “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதற்குமான பின்புலம் இதுதான்.

நிலம் + சுயமரியாதை = தலைப்பாகை!

சீக்கியர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகைக்குப் பெயர் பக்ரி அல்லது பாக்.

தோளில் துண்டு போடும் உரிமையும், முண்டாசு கட்டும் உரிமையும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குக் கிடையாது என்ற பார்ப்பனியக் கொடுங்கோன்மைதான் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ‘பாரதக் கலாசாரம்’

விவசாயிகளின் மதமாகத் தோற்றமெடுத்த சீக்கிய மதம், இதனைக் கேள்விக்குள்ளாக்கியது. தலைப்பாகை அணிவதை, அடி பணிய மறுப்பதன் அடையாளமாக மாற்றினார் குரு கோவிந்த் சிங் (17-ம் நூற்றாண்டு). “ஒவ்வொரு சீக்கியனும் தலைப்பாகை அணிய வேண்டும்” என்பது  கட்டாயமான மதக் கோட்பாடானது இப்படித்தான்.

சுயமரியாதைக்கு எதிரான அடிமைத் தனங்கள் அனைத்தையும் பார்ப்பன மதம் தனது மதக் கோட்பாடாக்கியது.  ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வோ, சீக்கிய மதக் கோட்பாடாகப் பரிணமித்தது. சுய மரியாதை வேண்டுமென்றால் விவசாயிக்கு நிலம் வேண்டும். நிலம் வேண்டுமென்றால் கலகம் செய்ய வேண்டும். கலகத்தையும் அங்கீகரித்தது சீக்கியம்.

கடவுள் செயல் என்ற பெயரிலோ, விதி என்ற பெயரிலோ அநீதிக்குத் தலை வணங்காதே என்கிறது சீக்கியம். குரு கோவிந்த் சிங்குக்குப் பின் அவரது  சீடரான பண்டா சிங் பகதூர், நிலச்சுவான்தார்களுக்கு எதிராகப் போராடி, யமுனைக்கும் சட்லஜ் நதிக்கும் இடையிலான விளை நிலங்களின் மீது விவசாயிகளின் உரிமையை நிலை நாட்டி இருக்கிறார். இது நடந்தது 1710 ஆம் ஆண்டு.

நிலப்பிரபுத்துவ – சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, ‘நிலத்தின் மீதான உரிமை – உழவனின் சுயமரியாதை’ ஆகியவற்றின் ஒன்றிணைந்த வடிவமாகத்  ‘தலைப்பாகை’ மாறியது இப்படித்தான். எனவேதான், ஒரு விவசாயி தலைப்பாகையைத் தரையில் வைக்கிறான் என்றால், அவன் அநீதியையும் அடிமை நிலையையும் ஏற்கிறான் என்று பொருளானது.

(1965 இல் வெளியான ‘ஷாகித்’ (தியாகி) என்ற திரைப்படத்தில் வரும் பாடல் காட்சி இது. ஒரு ஏழை விவசாயி, தனது தலைப்பாகையைக் கழற்றி நிலப்பிரபுவின் காலடியிலும் ஆங்கிலேய அதிகாரியின் காலடியிலும் வைக்க முனைகிறார். அவரைத் தடுத்து இந்தப் பாடலைப் பாடும் அஜித் சிங்கை போலீஸ் இழுத்துச் செல்கிறது. கண் கலங்க இந்தக் காட்சியைப் பார்த்து நிற்கிறான் சிறுவன் பகத் சிங்)

‘சீக்கியர் வரலாறு’ என்ற நூலில் குஷ்வந்த் சிங் குறிப்பிடும் ஒரு உண்மை இங்கே கவனிக்கத்தக்கது. வரலாற்றில் அடிக்கடி அந்நியப் படையெடுப்புகளுக்கு ஆளான பகுதி பஞ்சாப். “போர்களின் போது, போரிடும் சாதியினர் என்று சொல்லப்படும் சத்திரியர்கள் பின்வாங்கி ஓடியிருக்கிறார்கள். ஆனால் ஜாட் (உழவன்) சொந்த மண்ணை விட்டு எப்போதும் ஓடியதில்லை. ஜாட் என்பவன் ஒரே நேரத்தில் உழவனாகவும் போர் வீரனாகவும் இருந்திருக்கிறான்” என்கிறார் குஷ்வந்த் சிங். இது அந்த மண்ணின் வரலாறு.

“இடுப்பில் செருகியிருந்த உடை வாளால் அவன் நிலத்தை உழுதான். மண்ணும், பெண்ணும் ஆக்கிரமிக்கப்படும்போது, அந்த உடை வாளைக் கொண்டே அவன் போரிட்டான்” என்று குறிப்பிடுகிறார் குஷ்வந்த் சிங். இது கவிதையாய் மிளிரும் ஒரு வரலாற்று உண்மை.

“பக்ரி (தலைப்பாகை) சம்பால் (பத்திரம்) ஜட்டா (உழவனே)” என்ற  பாடல் வரியில், ஜாட் என்ற சொல்லுக்கு உழவன் என்பதுதான் பொருள். ஆனால் வரலாற்றுப் போக்கில், ஜாட் என்பது ஒரு ஆதிக்க சாதியாகி விட்டது. சாதியை மறுத்துப் பிறந்த சீக்கிய மதமும் சாதிக்குப் பலியாகி விட்டது.  இதே ஜாட் சாதியினரைத்தான் முசாஃபர் நகர் கலவரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக பா.ஜ.க தூண்டிவிட்டது. இவையனைத்தும் கசப்பான உண்மைகள்.

‘சாதி ஆதிக்கம் – இந்து மத வெறி – விவசாய நெருக்கடி’ ஆகியவற்றுக்கு இடையிலான உள் உறவைப் புரிந்து கொள்வது, காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றில் ஒன்றுக்கெதிராக ஒன்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தைத்தான் சங்கப் பரிவாரம் கையாண்டு வருகிறது.

‘வயிறா மானமா, சோறா சுய மரியாதையா’ – என்று கம்யூனிஸ்டு இயக்கத்தினரும் திராவிட இயக்கத்தினரும் நடத்திய விவாதங்களை நாம் அறிவோம். வர்க்கத்தையும் சாதியையும் எதிர் நிலைப்படுத்திக் காணும் தவறான பார்வையின் விளைவு அது.

சீக்கியனின் தலைப்பாகை சோற்றையும் சுயமரியாதையையும் சேர்த்துக் கட்டியிருக்கிறது. ‘தலைப்பாகை பத்திரம்’ என்ற எச்சரிக்கை மிகவும் பொருள் பொதிந்தது.

அது விவசாயிகளுக்கானது மட்டுமல்ல. ஏனென்றால், சுயமரியாதையைத் துறக்கத் துணிந்தவர்களும் கூட, சோற்றைத் துறக்க முடியாதே!

சோறு என்பது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. புதுமைப் பித்தனுடைய சொற்களில் கூறுவதாயின், ‘சோற்றை உண்ணும் பிராணிகள்’ அனைவரின் வயிற்றுக்கும் இது தெரியும்.

ஆனால் மூளைக்குத்தான் இன்னும் உறைக்கவில்லை.

– மருதையன்

சீக்கியர்களின் வீரியமிக்க போராட்ட குணத்திற்கு இப்படி ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது.

முகப்பு ஓவியம்: நன்றி – சந்தோஷ் நடராஜன்

– தொகுத்தளித்தவர் வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *