துருக்கியின் ஓட்டோமான் பேரரசினால் 1915 முதல் 1923ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். சரியாக 105 ஆண்டுகளுக்கு முன்பு, 1915-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று 250க்கும் மேற்பட்ட ஆர்மீனிய அறிவுஜீவிகள், சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியமான பலர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆர்மீனிய பத்திரிக்கையாளர்கள் பலரும் சிறை வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஏப்ரல் 24ம் தேதியை இனப்படுகொலையை நினைவு கூறும் நாளாக உலகம் முழுதும் வசிக்கும் ஆர்மீனிய மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
துருக்கியின் பேரினவாதத்தால் வேட்டையாடப்பட்ட ஆர்மீனியர்கள்
துருக்கியர்களின் பேரினவாத முழக்கத்தின் கீழாக ஆர்மீனிய மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். 1914 காலக்கட்டத்தில் ”ஆர்மீனியர்களுடனான வணிக்கத்தை புறக்கணிப்போம், ஆர்மீனியர்களின் கடைகளை புறக்கணிப்போம்” என்று ஆரம்பித்த இனவாத முழக்கம் இனப்படுகொலையில் நகர்ந்து நின்றது.
1915-ல் இனப்படுகொலை நடவடிக்கை துவங்கிய 9 மாதத்தில் 6,00,000 ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 4,00,000 ஆர்மீனியர்கள் மெசபடோமியாவை நோக்கி இடம்பெயர்த்தப்பட்டு செல்லும் வழியில் பல்வேறு கொடுமைகளாலும், அடிப்படை தேவைகள் ஏதுமின்றியும், பசியிலும் மடிந்து போனார்கள்.
சொல்ல முடியாத கொடுமைகள்
மேலும் ஏராளமான ஆர்மீனியர்கள் கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் ஒட்டோமான் பேரரசினால் உள்ளாக்கப்பட்டனர். 8,80,000 ஆர்மீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 450க்கும் மேற்பட்ட மடங்கள், 1900 பள்ளிகள், 2400 தேவாலயங்கள் துருக்கி படைகளினால் கைப்பற்றப்பட்டன. ஏராளமான புராதான சின்னங்களும், நூல்களும், நூலகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. 3600 கிராமங்கள் மற்றும் நகரங்கள் துருக்கியமயமாக்கப்பட்டன. ஆர்மீனியர்களுடன் சேர்த்து கிரேக்கர்கள், அசிரியர்கள் உள்ளிட்டோரும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
1922ம் ஆண்டு ஆகஸ்டு 30ம் தேதி ஸ்மிர்னா பகுதியில் வசித்து வந்த ஆர்மீனியர்களும், கிரேக்கர்களும் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். துருக்கி படையினரால் அவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துறைமுகத்தினை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர். இந்த ஒரு நிகழ்வில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான ஆர்மீனிய இளைஞர்கள் கட்டாய் தொழிலாளர்களாக சிரிய பாலைவனங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
இனப்படுகொலை என்பது அங்கீகரிக்கப்படுமா?
இன்றுவரை அர்மீனியர்களுக்கு நிகழ்ந்த இனப்படுகொலையை துருக்கி மறுத்து வருகிறது. அவர்களை முதல் உலகப் போரில் இறந்த மக்களாக சொல்லி வருகிறது. தற்போது வரை 32 நாடுகள் ஆர்மீனியர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரித்திருக்கின்றன. இன்னும் ஆர்மீனிய மக்கள் 105 ஆண்டுகள் கடந்தும், தங்கள் இனத்திற்கு நடந்த இனப்படுகொலை அங்கீகரிக்கப்படுமா, தங்களுக்கு நீதி கிடைக்குமா என்று போராடி வருகிறார்கள். ஆர்மீனியர்களின் மனத்திடமும், உறுதியும் தமிழீழத்தில் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது.
கொரோனாவினால் நினைவேந்தலை அனுசரித்த முறை
ஒவ்வொரு ஆண்டும் ஆர்மீனிய இனப்படுகொலை நாள் உலகம் முழுதும் உள்ள ஆர்மீனிய மக்களால் ஏப்ரல் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்று கூடி ஊர்வலமாக சென்றும், ஒளியேந்துதல் உள்ளிட்ட நினைவேந்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ன் கிளண்டேல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் மாபெரும் ஊர்வலத்தினை நடத்தி வந்தார்கள்.
இந்த ஆண்டு உலகப் பெருந்தொற்றான கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் ஆர்மீனியர்கள் இனப்படுகொலை நினைவேந்தலை கடந்த காலங்களைப் போன்று அனுசரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டிலிருந்தே இனப்படுகொலையை அனுசரிக்கும் முறையினை இந்த ஆண்டு ஆர்மீனிய மக்கள் கடைபிடித்திருக்கிறார்கள். ஆர்மீனியாவில் உள்ள யெர்மேன் நகரின் சிட்செர்னகாபெர்ட் இனப்படுகொலை நினைவக கட்டிடத்தில் இரவு 9 மணிக்கு நினைவு ஒளி ஏற்றப்பட்டது. அனைத்து தேவாலய மணிகளுக்கு 3 நிமிடத்திற்கு தொடர்ந்து ஒலித்தன. மக்கள் வீடுகளிலிருந்து ஒளியேந்தி நினைவேந்தலை அனுசரித்தனர்.
இனப்படுகொலையின் நினைவகத்தின் 12 தூண்கள், ஒட்டோமான் பேரரசின் 12 நிர்வாகப் பகுதிகளில் நடைபெற்ற ஆர்மீனிய இனப்படுகொலையை குறிக்கிறது. அந்த 12 தூண்களிலிருந்தும் நீல நிற ஒளி விண்ணை நோக்கி பாய்ச்சப்பட்டது.
ஆன்லைன் வழியாக தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களால் நினைவேந்தல் உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆன்லைன் வழியாக சிறு கலை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களில் பசியில் உள்ள மக்களின் பசியாற்றுவதை இந்த ஆண்டு நினைவேந்தல் இலக்காக ஆர்மீனிய குழு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட 1.5 மில்லியன் ஆர்மீனிய மக்கள் நினைவாக 1.5 மில்லியன் அமெரிக்க ஏழை மக்களுக்கு உதவி மற்றும் நன்கொடை அளிப்பதை வேலைத்திட்டமாக தெரிவித்துள்ளார்கள்.
ஒரு நாள் தங்களுக்கு நீதி கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையில் தங்கள் போராட்டத்தினை தொடர் அடுத்த தலைமுறையையும் ஆர்மீனியர்கள் தயார்படுத்தி வருகிறார்கள்.