கரும்புலிகள்

கரும்புலிகள் மரபும் தமிழீழ எழுச்சியும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் எனும் படைப்பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லட்சியத்திற்காக உயிர்விடத் துணிந்த இப்படைப்பிரிவின் மனோபலத்தினை உலக நாடுகள் பலவும் ஆச்சரியத்தோடு பார்த்தன. 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கேப்டன் மில்லர் என்பவர் முதல் கரும்புலியாய் வெடித்து நெல்லியடி பகுதியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அந்த ஜூலை 5-ம் தேதி கரும்புலிகள் நாளாக தமிழீழத்தில் அனுசரிக்கப்பட்டது. 

விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலமாக கரும்புலிகள் இருந்தனர். அப்படிப்பட்ட கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி குறித்து உயிராயுதம் நூலில் வெளிவந்த கட்டுரை ஒன்றினை தகவலுக்காக இங்கே பதிகின்றோம். இந்த நூல் கனடாவிலிருந்து செயல்பட்ட உலகத் தமிழர் இயக்கத்தினால் வெளியிடப்பட்டது. 

கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி

கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.

கரும்புலித் தாக்குதலை நடத்தும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள் யார்..? இவர்களது உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன ?

ஈடு இணையற்ற இவர்களது ஈகமும் மன ஓர்மமும் சமுதாயத்தில் எற்படுத்தும் தாக்கம் எத்தகையது, என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளானது மானிட ஆய்வாளர்கள் மத்தியில் ஆராய்ச்சிக்குரியனவாகிவிட்டன. இன்று உலகெங்குமுள்ள அடக்குமுறையாளர்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க விழையும் மக்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்க முனைகின்றனர். இவர்களிடம் ஆள், ஆயுத பலம் உண்டு. ஆட்சி அதிகாரம் உண்டு. தொழில் நுட்பவலுவுண்டு. இவற்றை தேவைப்படும் இடங்களுக்கு, தேவைப்படும் நேரங்களில் கொடுத்து மாறி, போராட்ட சக்திகளை பலம் இழக்க செய்து, தமது அடக்குமுறைகளை வலுப்படுத்துகின்றனர். இந்த நவீன அடக்கு முறையாளர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு ஆள் – ஆயுத தொழில் நுட்பத் திறன்களைப் போராட்ட சக்திகள் கொண்டிருப்பதில்லை.

மிகக் குறைந்த அளவில் இவர்களுக்கு இருக்கும் போராட்ட திறன்களில் இருந்து மிக உச்ச பயன்களைப் பெற்றாலொழிய போரட்ட சக்கரத்தை ஒர் எல்லைக்கப்பால் நகர்த்த முடியாது. எனவே ஒடுக்கு முறையாளர்களின் நாடியை ஒடுங்கச் செய்யும் அளவுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும் வேவ்வேறு வடிவங்களில் போர்ச்சக்கரம் நகர்த்தப்பட வேண்டும்.

இந்தப் போர் வடிவங்களுக்குள்ளே உயர்ந்ததும், உன்னதமானதுமான விடுததைப் புலிகளின் போர் வடிவம்தான் கரும்புலித் தாக்குதலாகும்.

தன்னை இழந்து எதிரிகள் பலரை அல்லது எதிரியின் பலமிக்கதொரு இலக்கை அழிக்க கூடிய படையணி ஒன்றை அமைக்கும் யோசனையை, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தார்.

அந்த எண்ணக் கருவை செயற்படுத்தக் கூடிய ஆற்றலை விடுதலைப் புலி வீரர்கள் மத்தியில் சிறுகச் சிறுக எற்படுத்திக் கொண்டுவாந்தார். பின்னர் “ஒப்றேசன் லிபறேசன்” என்ற பெயருடைய இரணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தன. இதன் மூலம் சிங்கள இராணுவத்திற்கு உளவியல் ரீதியான போரிடும் ஆற்றல் திடிரெனக் கூடியது. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் எனத் திமிருடன் சிந்திக்க தொடங்கியது.

இதே சமயம், அந்த இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து, மற்றைய பகுதிகளுக்கு சென்றதுடன், அந்த திடிர் நடவடிக்கையால் மக்கள் குழம்பியும், போராட்ட வெற்றியில் நம்பிக்கை இழக்கக் கூடிய, சூழலும் தோன்றியது. இந்த சூழ்நிலைகளில்தான் ஒரு கரும்புலித் தாக்குதலை நடத்த தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்.

1987 ஆம் ஆணடு ஜூலை மாதம் 5ம் திகதி, நெல்லியடிச் மத்திய மகாவித்தியாலத்தில் அதைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவ முகாமிற்குள் முதலாவது கரும்புலி வீரன் புகுந்து அம் முகாமை சின்னாபின்னமாக்கினான்.

சிங்கள அரசையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் கிலி கொள்ளச் செய்த அந்த முதலாவது கரும்புலித் தாக்குதல், கேப்டன் மில்லர் செய்து முடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை பல கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்தப் பட்டுவிட்டன. அதில் பல கரும்புலிகள் விரச்சாவு அடைந்து உள்ளனர்.

ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும், வீராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது.

போர்க்களத்திற்குச் செல்லும் போகும்போது கூட திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் ஒரு விடுதலைப் புலி வீரன் செல்கிறான். சில வேளை அவன் அங்கே சாவை சந்திக்கலாம் அல்லது திரும்பி வரலாம்.

ஆனால், கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய சாவை தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அடுத்த நிமிடத்தில் சாகப்போகிறேன் என்ற உண்மையை பூரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள்.

இராணுவ முகாங்களில் இருக்கும் பலநூறு எதிரிகளின் கரங்களில் இருந்து முழங்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கிகளை கருத்தில் எடுக்காது, உடைந்து நொருங்கி போய்க் கிடக்கும் பாதைவழியே சீராக நிதானமாக வெடிமருந்து வண்டியை ஓட்டிச் சென்று, எதிரி முகாமின் இதயத்திற்குள்ளே புகுந்து, தன்னையும் சேர்த்து வெடிக்கச் செய்வதென்பது சாதாரண விடயமல்ல.

இயல்பாகவே அச்சமூட்டும் அலைகளைக் கொண்ட அகண்ட சமுத்திரத்துக்குள், நடு இரவில், எதிரியின் நவீன காவற் கருவிகளையும் புத்தி சாதுரியமாக மீறி, வெடிமருந்து படகுடன் உட்புகுந்து எதிரியின் கப்பலை நெருங்கி முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை இனங்காண்பதற்காக ஒரு முறை கப்பலை சுற்றி வந்து, குறித்த இலக்கின் மீது மோதி, வெடிமருந்து படகுடன் சேர்ந்து வெடித்து சிதற ஒரு மனித மனம் உடன்படாது.

இவைகள் ஒரு சாதரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதை செய்வதற்கென்றொரு ஆத்மீக பலம் தேவை. தன்னை தற்கொடை செய்து கொள்ளத் தயாரான மனோதிடம் வேண்டும். தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றம் இன்றி, உறுதியுடன் குறி பிசகாது எதிரியை தேடி ஓடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்து கொள்ள தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின்படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல. இது அடிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்து விசையாக விளங்கும் உயரிய போர் வடிவம்தான் எங்களது கரும்புலிகள்.

கரும்புலிகள் புகைப்படம்

உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.

இந்த மனோபலம் வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை எற்படுத்த போகும் சக்தி கொண்ட ஒரு அரசியல் வடிவமுமாகும்.

ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரை போக்கி கொள்ளும்போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலை போரட்ட சக்கரத்தை முன்னோக்கி தள்ளிவிடுவதுடன் வீரம்மீக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட தமிழ் சமுகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டி விடுகின்றது.

தேச பக்தியையும் விர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால், உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்று கொள்ள முடியும்.

இன்று பல நூற்றுகணக்கான விடுதலைப்புலி விரர்கள் தங்களைக் “கரும்புலி” அணியில் இணைத்து கொண்டு இருக்கின்றனர்.

ஓவ்வொரு முறையும் கரும்புலித்தாக்தலுக்கான திட்டம் தீட்டப்படும்போது, தன்னைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு வீரனும், வீராங்கனையும் முண்டியடிக்கின்றார்கள்.

அலையலையாக கரும்புலித் தாக்குதலுக்கு தயாராகும் இந்த தியாகச் செயலை உலகில் எங்குமே காணமுடியாது. இது உலக அதிசயங்களில் புதியதொன்றாகும்.

களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்பூட்டும் வீரச் சாதனைகள், சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமுகத் தாக்கம், தமிழீழக் குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளர்த்துச் செல்லும் என்பது உறுதி.

முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்

கேப்டன் மில்லர்

மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவருடைய தந்தை இலங்கை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவர் எப்போதும் சித்தமாக இருந்தார். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறார். ஒவ்வொரு மோதலிலும் மில்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவர்.

வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுகையிட்ட போது பிரபாவின் அணியினரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டார். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்குப் பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தார்.

பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்டருடன் பணியாற்றியவர்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்றுக் கொண்டனர். ஒன்றன்பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும், அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.

திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும், ஏனென்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.

வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டார். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.

சரியான நேரம் நெருங்கியதும் முகாமை தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்த சந்தர்பத்தில் கமலும் அவருடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்.


கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினார்.

பயிற்சியை முடித்து விட்டு மட்டக்களப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தார். கிழக்கில் இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது. மட்டக்களப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும்பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றார்.

தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தார். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தார். அவ்வேளைகளில் கூட தான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.

கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவரிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்ரக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தார்.

அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

மில்லர் சிலை

கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்ல வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர். பொறுப்பாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள்.


மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்ரக் வண்டியை ஸ்டார்ட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினார். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தார். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ ஜோக் அடித்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்தார்.

முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றார். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டார். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப்பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது.


கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தார். தடைகள் அகற்றப்டட்டு விட்டது. ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில் இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாகக் கேட்டது.

அதைக் கேட்ட மில்லர், ”பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றார்.


மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு என்றார் பிரபா. மில்லர் ஒருமுறை சற்று சிரித்துக் கொண்டார். ஏனென்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணியவில்லை. ”பிரபா முன்பு ஒருமுறை யாழ்ப்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன்” என்று மில்லர் கூறினார்.


கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவரை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற, ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தார். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.

மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினார். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான். வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தார். பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினார். கருவி இயங்கத் தொடங்கியது.

மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டார். பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்து ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ”மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு”, மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..

வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார்ட் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.

இயக்கத்தினர் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரயோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.

மில்லரின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தார். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தார்.

கட்டுரை: உயிராயுதம் நூல், உலகத்தமிழர் இயக்க வெளியீட்டு வாரியம் – கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *