தமிழக வெகுசன திரைப்படங்களில் தீவிர அரசியல் பேசியவர் இயக்குநர் ஜனநாதன். தமிழின் மிக முக்கியமான இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர்.
இயக்குநராக வேண்டும் என்று திரைத்துறைக்கு வந்து பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ரஷ்ய எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற நாவலான ’வெண்ணிற இரவுகள்’ நாவலைத் தழுவி தனது முதல் படமான ’இயற்கை’ திரைப்படத்தை எடுத்தார். தமிழகத்தில் அது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். மேலும் லாபம் என்ற படத்தை எடுத்து முடித்து எடிட்டிங் பணிகளில் இருந்து வருகிறது. இவரது இறப்பு தமிழ் சமூகத்திற்கும், திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.
ஜனநாதனின் திரைப்படங்களின் அரசியல் காட்சிகளும், வசனங்களும் வெகுமக்களுக்கு இடதுசாரி அரசியல் பார்வையைக் கொண்டு சேர்த்தவை. ஜனநாதனின் திரைப்படங்களில் வந்த 5 முக்கிய அரசியல் காட்சிகளை இங்கு பார்வைகளை இங்கு பார்ப்போம்.
1. அரசியல் பொருளாதாரம் விளக்கம்
பேராண்மை திரைப்படத்தில் சமூகநீதி, பழங்குடிகள் மீதான வன்முறை குறித்தெல்லாம் பேசிய ஜனநாதன், ஒரு காட்சியில் ஜெயம் ரவி அரசியல் பொருளாதாரம் குறித்து விளக்குவதை வைத்திருப்பார். உற்பத்தி மற்றும் உழைப்பின் பாத்திரம் குறித்து மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியிருப்பார்.
2. மருந்து நிறுவனங்களின் அரசியல்
ஜீவா நடித்த ’ஈ’ திரைப்படத்தினை சர்வதேச மருந்து நிறுவனங்கள் ஏழை, எளிய மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தப்படுவதை மையமாக வைத்து எடுத்திருப்பார் ஜனநாதன். மருத்துவம் படித்து போராளியான நெல்லை மணியாக வரும் பசுபதி ஜீவாவிற்கு அரசியல் வகுப்பெடுக்கும் காட்சி முக்கியமானது. கீழ்காணும் வீடியோ இணைப்பில் நேரம் 2:13:48 நிமிடங்களில் அந்த காட்சியைப் பார்க்கலாம்.
3. பழங்குடிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அரசியல்
பேராண்மை திரைப்படத்தில் பழங்குடிகள் மீது வனத்துறையினர் நிகழ்த்தும் வன்முறையை உணர்வுப் பூர்வமாக காட்டியிருப்பார். இளைய தலைமுறையினர் சர்வதேச அரசியலையும், பொதுவுடமை அரசியலையும் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியிருப்பார்.
4. காவல்துறை, அரசு, முதலாளித்துவம்
புறம்போக்கு என்னும் பொதுவுடமை திரைப்படத்தில் மக்களுக்காக போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட பொதுவுடமை இயக்கப் போராளி பாலனை நினைவுபடுத்தும் விதமாக, பாலு என்ற கதாபாத்திரத்தை வைத்திருப்பார். அதன் வழியாக காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் முதலாளிகளின் நலனுக்காக வேலை செய்வதையும், அனைத்து பிரச்சனைக்கும் காரணம் தனியுடமை என்பதையும், தீர்வு பொதுவுடமையே என்பதையும் பேசியிருப்பார்.
5. விளையாட்டின் பின்னால் நடக்கும் கார்ப்பரேட் அரசியல்
ஜெயம்ரவி நடிப்பில் வட சென்னையின் குத்துசண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ’பூலோகம்’ திரைப்படத்திற்கு எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுதினார். அப்படத்தில் விளையாட்டுப் போட்டிகளுக்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் பொருளாதார வணிக அரசியலை பேசியிருப்பார். அதன் முக்கியமான காட்சி.